சனி, பிப்ரவரி 28, 2009

சுவாசம்..


*
சட்டென்று பறித்த
பூவின் காம்பில் துளிர்க்கும்..
சிறு கண்ணீர்த் துளியைத் தொட்டு..

ஒரு இரங்கற்பா
எழுதத் துடிக்கும்
கவிஞன்..

காற்றைப் போல்
எங்கும் சுவாசிக்கிறான்.

********

என் எழுதாத இரவு..


*

முழுமை பெறாத
வாக்கியத்துக்குள்..
வெளிப்படாமல் காத்திருக்கும்
ஒரு
அர்த்தத்தைப் போல்..

என்
இரவும் காத்திருக்கக் கூடும்..

நான்
இன்னும் எழுதாத..
ஒரு கவிதைக்காக..

*********

ரீங்காரம்..


*

இதயம்
துடிக்கும் லயத்தில்
ஸ்ருதி சேரத் தவிக்கும்..
உன் நினைவுக் குறிப்புகள்.

மனதின்
'புன்னகை ரீங்காரம்..'
மௌனமாய் முனகும்
இதழின் வளைவில்..

பிறந்து விடுகிறது
ஒரு
அழகான இசை..!

********

அறையும்..நானும்..


*

என்
தனிமைப் புழுக்கத்தை
வைத்த கண் வாங்காமல்..
வேடிக்கைப் பார்க்கிறது
என்..
அறை சுவற்றின் 'பல்லி.'

அதன்
அசைவற்ற மௌனம்..
மேலும்
என் நிலை கெடுத்த
கணத்தில்..

ஜன்னல் வழியாக
நுழைந்த காற்று..
என்...
வியர்வைக் குடித்து மறைந்தது.

சுவர் பல்லி..
எங்கோ
ஓடி ஒளிந்துக் கொண்டது.!

*********

கரைத் தொடும் அலைகள்..


*
பிஞ்சு விரல் கொண்டு
என் சுட்டு விரல் பற்றி..
கடற்கரை மணலில்
தத்தித் தத்தி..
நடந்த
மகளின் பாதங்கள்.

இன்று..
அக்னி வலத்தில்..
மணல் உதிர்க்கும்
பாதங்கள்.

அதன்
மெல்லிய ரேகைகளில்..
ஒட்டிக்கொண்டிருக்கக் கூடும்..
கொஞ்சமாய்
அந்தக் கடற்கரை..!

***********

முற்றுப்புள்ளி..


*

உன்

இதழ்களில்

புன்னகை எழுதி..

முற்றுப்புள்ளியாக

ஒரு மச்சத்தையும்.. வைத்த அழகில்..

திருப்தியாய் முடிந்தது..

ஒரு கவிதை.


*******

பசலை..


*

வெறுமையை
பிரசவிக்கும் உன் இரவுகள்..
என்னைப் பார்க்காத
'ஒரு நாளின்'
விளைவே.

உன் கனவுகள்
விலை போகும்..
சந்தையானது
என் கண்கள்.

பேரம் முடிவுறாத நிலையில்..
அடுத்த கனவு
தயார் செய்ய
கிளம்பிவிடுகிறாய் நீ.

எழுதி எழுதிக்
கிழித்துப் போட்ட..
கடிதக் குப்பையில்..
'காதல்'
கலைந்து கிடக்கிறது...
பெருக்கித் தள்ள மனமற்று...!

************

பாதைகளின் தியானம்..

*

கண்கள் மூடித் தியானிக்க முடிவதில்லை
இடி மின்னலோடு அமைதி குலைகிறது.

இரவைக் கறந்த... பகலின் முதுகில்
எங்கோ படிந்து விட்டது.. நிலவின் நிழல்.

மனதின்.. நுனி வேர் பிடித்தபடி
ஆழத்தில் இறங்கும் எண்ணங்கள்.. பதறுகின்றன.

எங்கோ புறப்பட்டு.. எங்கோ பயணிக்கும் பாதங்கள்
பாதைகளோடு.. முரண்பட்டு.. முணுமுணுக்கின்றன.

சுவடுகள் மட்டுமே.. ரகசியம் தாங்கி
யாருக்கோ.. காத்திருக்கக் கூடும்..
நூற்றாண்டுகள் கடந்தும்..!

************

சாதுர்ய கணம்..!



*

குவியும் பார்வையின்

கீழ் நிழலில்..

துளி ஈரப் புன்னகை முனை.


மனசின் வேர்க்காலில்...

சிக்கும்

வார்த்தையின் மௌனம்..

பொருள் தேடியலையும்

மூச்சுக் காற்றில்..!


ஒற்றை எழுத்தில்

வளையும் உதடுகளில்..

காதல் படிமம்.


************

கூந்தல் மல்லிகை..!


*

உனக்காக

நான் சொன்ன

ஒவ்வொரு பொய்யும்

அழகானவை.


நீயுன்

வேலை முடிந்து

வீடு திரும்பும் வழியில்..

தெருப்புழுதியில்

கழற்றி வீசும்

கூந்தல் மல்லிகைப் போல்..

எட்டு மணி நேரத்தில்

வாடி விடுகிறது...


உனக்காக

நான் சொன்ன

ஒவ்வொரு பொய்யும்..!


***********