திங்கள், மே 31, 2010

சொன்னதையே சொல்லிக் கொண்டிரு..

*
சொன்னதையே சொல்லிக் கொண்டிரு
என்கிறாய்
எல்லா சந்திப்பிலும்

இதுவரை சொன்னதை
நான் சொல்லிக் கொண்டே இருந்ததை
நீ கேட்டதில்லை என்பதை
ஒப்புக் கொள்ள மறுக்கிறாய்

முன்னமே தெரியும்
என்பதான வாதத்தை முன் வைக்கிறாய்
அந்த வாதம்
ஏற்கனவே விவாதிக்கப்பட்டவை

இல்லை என்கிறாய்

புதிய கோணத்தில் புதிர் முடிச்சுகள்
உட்சிக்கலோடு புதிப்பிக்கப்பட்டிருப்பதாக
நம்பச் சொல்லுகிறாய்

எழுதியத் தீர்ப்புகளை கிழித்துவிட்டு
வந்து நிற்கிறாய்
ஆதாரக் கோப்புகளின் மட்கிய ஏடுகளை
நினைவின் நூல் கொண்டு கோர்த்து நீட்டுகிறாய்

கை நீட்டிப் பெற்றுக் கொள்வதற்குள்
பின்னிழுத்துக் கொள்கிறாய்

திரும்பி நடக்கிறாய்

மறுநாள் வந்து நின்று
சொன்னதையே சொல்லிக் கொண்டிரு
என்று மீண்டும் தொடங்குகிறாய்
நேற்றைப் போலவே..!

****

நிராயுதபாணி..!

*
என்
ஒவ்வொரு ஆயுதங்களையும்
நீ பரிசாக யாசித்துப்
பெற்றுக் கொண்டாய்

பின்னொரு காலை
ஒரு போர்க்களத்தை
அறிவிப்பு செய்தாய்

துரோகக் கடிவாளம் பூட்டிய
மனக் குதிரையில்
விரைந்து வருகிறாய்

நின்று கொண்டிருக்கிறேன்
உன்னை எதிர்பார்த்துத்
தனியனாய்..

கையில்
ஒற்றைக் கேடயத்துடன்..!

****

தீர்ந்துவிடப் போகும் உலகத்தின் மீது..

*
அவள்
தன் கனவுகளை மொழிப்பெயர்க்கிறாள்
ஒவ்வொரு நாள் காலையும்
புதிய வர்ணங்களில்..

அவைகளை
தன் வார்த்தைகள் மீது பூசுகிறாள்

நதியின் சலசலப்பு ஓசையை
அவளால் சேர்க்க முடிகிறது

தேனடைகளின் இனிப்பை

மலைச்சரிவில் உருளும்
சரளைக் கற்களின் சப்தங்களை

உடையும் சருகுகளின் இசையை

நறுமணம் கமழும் மலர்களின்
இதழ் முனை வளைவுகளை

பனித்துளி வழிந்திறங்கும்
அகன்ற இலை நரம்புகளின் பச்சை நிறத்தை

எல்லாவற்றையும்..

காற்றில் விரல் பிடிக்கும் அபிநயங்களுடன்
கண்கள் அகற்றி..

தீர்ந்துவிடப் போகும்
இந்த உலகத்தின் மீது
அவசரமாய் மொழிப்பெயர்க்கிறாள்
ஒவ்வொரு நாள் காலையும்

தன் கனவுப் பை நிரம்பி வழியும்
இரவின் நிழல் தொட்டு..

****

தேவதைகள் விட்டுச் செல்லும் சிறகுகள்..

*
தேவதைக் கதைகளில் வரும்
தேவதைகள்
கதை முடியும் முன்
விட்டுச் செல்கின்றன
தம்
சிறகுகளை..

அதன் வர்ணச் சாயல் பூசிப்
பூக்கும் சொற்கள்
மகரந்தங்களைச் சூழ் கொண்டு

துயரங்கள் நீங்கக் கமழ்கின்றன
நறுமணங்களாய்..!

****

நிரந்தரமாய் தங்கிவிட்ட இருள்..

*
எப்படியும் சொல்லிவிட வேண்டும்
என்னும் தீர்மானம்
பலமுறை வந்து போவது உண்டு
ஆனாலும் நீ பறித்துவிடும் பூக்களில்
ரத்தம் துளிர்க்கிறது எப்போதும்

ஆறுதல் என்று எதை சொல்ல சொல்லுகிறாய் !
என்னோடு நிரந்தரமாய் தங்கி விட்ட இருளையா?

உடன்படுதல் உனக்கு சம்மதமில்லை
ஏற்றுக்கொள்ளுதல் எனக்கு ஒத்துப்போவதில்லை

நம்
இருமுனைகளின் கூர்மையிலும்
ரத்தமும் சதையுமாய் ஒரு துரோகம் வளர்கிறது

அதன் மாம்ச வேட்டைக்குரிய
மிருகங்களென மீசைத் துடிக்கக்
காத்திருக்கிறோம் நீயும் நானும்..!

எப்படியும் சொல்லிவிடவேண்டும்
என்னும் தீர்மானம்
மனதுக்குள் வந்து போவதுண்டு

ஆனாலும்
நீ பறித்துவிடும் பூக்களில்
ரத்தம் துளிர்க்கிறது எப்போதும்..

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ மே - 31 - 2010 ]

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2978

விஷம் மிளிர்தல்..

*
சர்ப்பப் பகலொன்றின்
பிளவுப்பட்ட நாக்கில்..

விஷம் மிளிரும்
பார்வைத் தீட்டி
நைச்சியமாய் உளறுகிறாய்..

நான்
நம்பும்படியான
ஒரு பொய்யை..

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ மே - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2954

கை நிறைய சொற்கள்..

*
தவளையின்
கீழ்த் தாடை உப்பலில்
வரிகளிட்டு வழிகிறது
ஒரு
கவிதைக்கான
பிசுபிசுத்த படிமம்

விரல் சுட்டித் தொட யத்தனித்த
கணத்தில்..
அது தன் நாவை நீட்டித் துப்பியது
ஒரு உவமையை

கை நிறைய சொற்களைக் கொண்டு
உன் உதட்டில் பூசிவிட
வாய்ப்புகள் துளிர்க்காத
பசலை வனத்தில்
சலசலத்து நகரும் நதிக் குமிழுக்குள்
அடைத்து அனுப்புகிறேன்..
அள்ளிப் பருகிக் கொள்..

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ மே - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2954

வேட்டையின் ஊற்றுக்கண்

*
அறையெங்கும் பெருகும்
வெப்ப மூச்சின் ஊற்றுக்கண்ணிலிருந்து
வழிகிறது காத்திருப்பின் பசி

சிறகு கோதி காத்திருக்கும்
மனப்பறவையின் விழிகள்
நினைவின் அடுக்குகளை ஊடுருவித் தவிக்கின்றன

மாம்சம் புசிக்கும் பறவையின்
அலகில்
மிருகத்தின் சுவாசம் வியர்க்கிறது

வேட்டைக்கு நாணிழுக்கும் விரல்கள்
துடிப்போடு குறி வைக்கிறது
கவனத்துக்குள் அகப்பட மறுக்கும்
பொழுதுகளை

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ மே - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2892

தற்கொலையின் கோட்டுச் சித்திரம்..

*
தற்கொலையின் வடிவங்கள் விசித்திரமானவை
அவை ஒரு நம்பிக்கையை
கோட்டுச் சித்திரமாய்
வரைந்து பார்க்கின்றன முதலில்

முழுமை பெறாத சித்திரங்களின்
நிராகரிப்பில் உருவாகிறது முதல் எதிர்ப்பு

மௌனக் கணங்களை அமைதியிழக்கச் செய்யும்
இரைச்சலை ஜன்னல் திறந்து
அனுமதிக்கின்றன

பிறகு அவற்றை ஒரு கதவைப் போல
அறைந்து சார்த்திவிடும் இறுக்கத்தை
மேற்கொள்கின்றன

கண்ணாடிக் குடுவையின் அடிப்பாகத்தில்
தேங்கிவிடும் சிறிதளவு தண்ணீரைப் போல
தற்கொலையின் வடிவங்கள்
மிகவும் விசித்திரமானவை

அவை தன் மீது
எந்தவொரு வர்ணங்களையும் பூசிக்கொள்ள
யாதொரு நிமிடத்தையும் அனுமதிப்பதில்லை

புரிதலின் விளிம்பு பிசிர்களை முடிச்சிட்டுப் பழக
அவை வெறுப்பின் விரல்கள் கொண்டு
யாவற்றையும் பின்னிவிடுகின்றன..

எங்கெங்கோ சிக்கலாகி நீர்த்துப்போன
நினைவுகளின் உள்முகங்களை மூர்க்கமாய்
மறுதலிக்கின்றன..

தற்கொலையின் வடிவங்கள் விசித்திரமானவை
அவை
நடந்தேறிய பிறகு தான் தம்மைக் கொஞ்சமாக
வெளிப்படுத்திக் கொள்கின்றன..

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ மே - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2865

பிரிதலின் பசலையை நெய்யும் மௌனக் கொடி..

*
உதடுகளைப் பூசிப் போகின்றன..
கனவில் பொழிந்த பனித்துளிகள்..
கை நிறைய மலர்க்கொத்துத் தருகிறாய்..
இரவின் வாசலில்...இசையின் பின்னணியில்

பார்வையின் பரவசத்தில்..
இதயத்தில் தூறுகிறது மழைச்சாரல்..
இலைக் குடை அகப்படா வனத்தில்..
தனித்து அலைகிறோம்..
நதிக்கரையோரம்

தென்றல் கசியும் மஞ்சள் வெயில் பொழுதை..
பென்சில் கொண்டு கிறுக்கிப் பார்க்கிறேன்..
அதில்..
கருப்பு வெள்ளையாய் விரிகிறது
உன் புன்னகை..

பிரிதலின் பசலையை
நெய்துக் கொண்டே இருக்கிறது..
மௌனக்கொடிச் சுற்றி மனது..!

****

நன்றி : ' வார்ப்பு ' இணைய இதழ் ( மே - 2 - 2010 )

http://www.vaarppu.com/view/2165/