திங்கள், மார்ச் 30, 2009

மீன்கள்..!

*

மதில் மேல்..
ஏறியப்
பூனை..

வேடிக்கைப் பார்ப்பது..

உன்
மீன் தொட்டி
மீன்களை அல்ல..

தோட்டத்தில்..
உட்கார்ந்து..

புத்தகம் வாசிக்கும்..
உன்
கண்களை..

*****

இதழ் கரையில்..

*

உன்
இதழ்களின்
கரையில்..உறங்கும்..
கவிதையைத்
தட்டி எழுப்ப முயற்சிக்கிறேன்..

நீயோ..
அதை..
ஒரு புன்னகையின் மூலம்..
நிறைவேற்றுகிறாய்..!

******

கண்ணாடி ரசவாதம்..!

*

கண்ணாடியில்
முகம் பார்த்த
கணத்தில்..
ரசம் வழிந்தது..

காலப் பெருவெள்ளத்தின்..
இருள் சூழ்
நிழலொன்று..

கண்ணுக்குக் கீழே
தொங்கியது..
கரு வளையமாய்..

மன வெளியின்
நிலப் பரப்பை
அளக்கத் துடித்த
பார்வையை..

மோதிக் குடித்தது
கண்ணாடிக் குழம்பு..

சட்டகத்துள்
சிறைப்பட்ட
முகத்தின்
சுருக்கங்களில்..

வழிந்தபடியே..
இருக்கிறது..

பூசிப் பெயர்ந்த
கண்ணாடி..
ரசமொன்று.

*****

நெளிந்தோடும் காதல்கள்..

*

காலையில்
அவசரமாய்
அவள்
கிண்டித் தந்த
'நூடுல்சில்'
காதல் இருந்தது..

பஸ் பயண
நெரிசலில்..

கொடுத்தனுப்பிய
காசுக்கு..
கை மாறிய..
டிக்கட்டில்..

எவளோ
ஒருத்தியின்
உள்ளங்கை..வியர்வை
மிச்சம்..இருந்தது..

வாடிக்கையாளரைத்..
தேடிப் போன..
கண்ணாடிக் கட்டிடத்துள்..

வரவேற்பில்
யந்திரமாய் பதிலளித்த..
பெண்ணின்
கண்களில்..
வாசிக்க முடிந்ததொரு..
கனத்த மௌனத்தை..

பூங்காவில்..
நண்பன்.. அறிமுகப்படுத்திய..
அவன் காதலியின்..
கைக் குலுக்கலில்..
உணர முடிந்ததொரு
நம்பிக்கையை..

வீடு
திரும்பும் வழியில்..

பூக்களை
முழமிட்டுத் தந்த
பூக்கார அக்காவின்..
சிரிப்பில்..

வாசிக்க
முடிந்ததொரு காதலை..

வீட்டுக்குள்..நுழைந்ததும்..
ஓடி வந்து..
என் கழுத்து 'டையை'
நளினமாய்க் கழற்றிய..

அவள் விரல்களில்..
நெளிந்தோடியது..
கொஞ்சம் காமம்..!

*******



அசைவுகளின் கரை..

*

அமைதியுற்று..
தளும்பும்
குளத்தின்..
நீர்
பரப்பில்..

அசையும்
பழுத்த..
அரசிலை மீது..

முன்னும் பின்னுமாய்..
நகரும்
எரும்பொன்றின்..

இதய அதிர்வு..

எதிர்க் கரையில்..
குதிக்கும்..
சிறுவனின்..
நீரலையை..
வேகமாய் இழுக்கிறது..
இக்கரை நோக்கி..!

******

நிழல் கடக்கும் ரயில் பூச்சிகள்..!

*

மதில் தாண்டிய
உன் பார்வையில்..
பூனையின் நடை..

ஒரு
கீற்றுக் கிழியும்
லாவகத்தில்..
உன்
மறுப்பின் லயம்..!

இலைகளூடே..
பரவும் காற்று
சேமிக்கிறது..
உன்
புன்னகையின்..
இசைக் குறிப்பை..

நீயும்
நானும்
விட்டுச் சென்ற..
பாதச் சுவடுகளின்..
மனற்குழி நிழலை..

நின்று
தயங்கிக் கடக்கிறது..
ரயில் பூச்சியொன்று..!

*******
நன்றி : உயிரோசை / உயிர்மை.காம் - (13.4.09)

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=1225

புன்னகைத் துளி..!

*

ரயிலற்ற..
தண்டவாளங்களுக்கிடையே..

மீந்துக் கிடக்கும்
குப்பைகள் நடுவே..
இருக்கக் கூடும்..

ஒரு
கசங்கிய
காதல் கடிதமும்..
கொஞ்சம்..
கண்ணீர்த் துளியும்..

பாதங்களில்..
தவறுதலாய்..
நசுங்கிய..
ரோஜா இதழ்களில்..

மௌனமாய்..
செத்திருக்கலாம்..
ஒரு முத்தம்..

நிமிர்ந்து பார்க்க
ஆசைப்படும்..
வானத்துக்குக் குறுக்கே

கட்டி வைத்திருக்கிறார்கள்..
மின் கம்பிகளை..

' பத்தாயிரம் வோல்டேஜ் '
என்கிறது
அறிவிப்புப் பலகை..

நீ
விபரம் தெரிந்தே..
உன்
புன்னகையை..
அதில்
காயப் போட்டுச்
சென்றிருக்கிறாய்...

ஈரமாய்..
சொட்டிக் கொண்டிருக்கிறது..
கண்ணீர்த் துளி..!


**********



முதல் வாசகன்..!

*

ஜன்னல் திட்டின்
தண்ணீர் பாட்டிலை
ஊடுருவும்
வெயிலொன்று
அலையலையாய்..

என்...
கவிதைத் தாளின்..
படிமங்களாய்..

தலைப்பில்
உட்கார்ந்து..

உதடு குவித்து..

எழுதும்
பேனாவின்..
முனையிலேயே..
உறிஞ்சுகிறது..
வார்த்தைகளை..!

*******

ஒரு சாலை விபத்தில்..!

*

எங்கோ
ஒரு சாலை விபத்தில்..
யாரோ
இறந்துப் போனதாய்..

கூட்டத்தின்..
நெரிசல்..
இடைவெளியில்...
ஓடியப் பார்வையில்..

ரத்தச் சிதறலோடு
வானம் பார்த்து..
மல்லாந்திருந்த முகத்தில்..

பால்ய
நண்பனின் அடையாளங்கள்..!


*******

மற்றுமொரு திங்கட்கிழமை...!

*

முடிந்த இரவின்..
முகத்தில் தொடங்கி..

முகத்தில் அறையும்
வெயில் பகல் தொடர்ந்து..

எத்தனை
முகங்கள்..
இந்த வழி நெடுக..?

ஒவ்வொரு விழியிலும்
ஒவ்வொருத் தேடல்..

எல்லாப் புன்னகையிலும்..
எங்கோ
கொஞ்சம் வெப்பம்..

நிஜங்களை..
போர்த்தி உறங்கும்
நிழல்கள்..

முடுக்கி விட்ட
வேலைகளின்..
யந்திர
ஓட்டங்களுக்கு நடுவே..

இப்படி..
கணப் பொழுதாவது

கம்ப்யூட்டர்
வழியே..வந்து...

என்
பாலைவனத்தில்..
மழையாய்..
பெய்கிறாய்..
நீ...!

******