வியாழன், நவம்பர் 19, 2009

இலக்கின்றிப் பறக்கும்..கோழியிறகு..

*

' அலைபாய்தல் ' என்கிற வார்த்தைக்கான
உரையாடலுடன்..
தொடங்கியது..
அந்தப் பேருந்து பயணம்..

ஜன்னல் கண்ணாடியை
இறக்கி விட்டுக் கொண்டதில்..
மழைச் சாரல்..
வெளிப்புறமாய் கண்ணீர்க் கோடுகளை..
மௌனமாய் இறக்கியதில்..
காட்சிகள்.. புகைப் போர்த்தின..

உன் வலக்கையும்
என் இடக்கையும்..
விரல் பின்னிக் கோர்த்துக் கொண்டதில்..
ரேகைகளுக்கிடையே..
ஓடிப் பிடித்து விளையாடுகின்றன..
இன்றிரவு
எழுதப் போகும்..கவிதைகள்..அத்தனையும்..

அலைபாய்தல்..என்பது..
கண்களை..
அதனின்று..உருவாகும் பார்வை..
சோழியுருட்டுவது.. - என்றேன்..

' ஆம்..
பேருந்து நிலையத்தில்..
நீ வந்து சேரும் வரை..
எனக்கு அது தான் நேர்ந்தது..' - என்றாய்..

அலைபாய்தல் ஒரு
கோழியிறகு..
மனதின் திசைவெளி யெங்கும்..
இலக்கின்றி...
பறந்துக் கொண்டே இருக்கும்.. - என்றேன்..

' ஆம்..
வீட்டிலிருந்து கிளம்பும்போது..
அப்படித் தான் இருந்தது..' - என்றாய்..

கண்ணாடி ஜன்னலின்.. நீர்த்திவலைகள்..
ஆர்வமுடன்..
உன் முகத்தை நோக்கித் திரும்பி வழிந்தன..
முன்பை விட வேகமாய்..

அலைபாய்தல்..
ஒரு மௌனச் சுழி..
அதில் சிக்கிக் கொள்ளும் தருணத்தை..
எளிதில்.. மீட்டெடுக்க இயலாது.. - என்றேன்..

' ஆம்..
எனக்கு.. இப்போது..
அது தான் நடந்துக் கொண்டிருக்கிறது..' - என்றாய்..

மழை ஓய்ந்து..
ஜன்னல் கண்ணாடிகள் திறக்கப்பட்ட வேகத்தில்..
அலை அலையாய் பாய்ந்து..
உட்புகுந்தது..
மற்றுமொரு உரையாடல்..

' தென்றல் ' - என்றாய்..
வெட்கமாய் தலை சாய்த்து..
சிரித்தபடி..

****




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக