வியாழன், மே 29, 2014

மூன்று டபிள்யூக்களுக்கு பிறகான ஒற்றைப் புள்ளி

*
நெருக்கியடுக்கப்பட்ட தோற்றப் பிழை கூடி
பட்டாணி உருண்டைகள் குவிந்த நெகிழி குடுவையின் மீது
நகரும் காலை நிழல்
வளி மண்டலம் உறிஞ்சிய காற்றில்லா நகர்வு நிகர் கல்லொன்றின்
பறவைக் கண் இமை அசைவு

எறும்பொன்றின் குச்சிக்கால் முனை வரையும் கோடுகள்
இட்டுச் செல்லும் தூசுப் படலத்தோடு
மேசை மீது எண்ணற்ற கேலக்ஸிகள்

வெப்பம் அனற்றும் அலமாரி கண்ணாடிக் கதவுகளை
மோதுகிறது அபத்த பிம்பம்
நானில்லை என்றொரு சிதறலை
வரிசைப் பிறழ்ந்த புத்தக வர்ணங்களை மொய்க்கும்
கொசுக்களின் ரீங்காரச் சிறகுகளில் மின்னுகிறது
சொற்களின் வெளிச்சம்

அறைக் கூரையிலிருந்து வழிந்திறங்கும் பொழுதுகளின் இழைப் பற்றி
தொங்குகிறது மௌனச் சிலந்தி

கணினித் திரையில் தட்டச்சப்படும் மூன்று டபிள்யூக்களுக்கு பிறகான
ஒற்றைப் புள்ளியில் எச்சமிடுகிறது வளிமண்டலம் நினைவுகூட்டி
துப்பும் புதிய கிரகம்

புற ஊதாக் கதிர்களின் வடிகட்டியில் மீந்த படிமங்களை கொண்டு
வலைப் பின்னுகிற எட்டுக்கால்களின் நூல்களையும்
இயக்கம் கொண்டசைகிறது
தப்பிதங்கள் நிறைந்த உலகின் பொம்மலாட்டம்

*****

நன்றி : ' யாவரும்.காம் ' இணைய இதழ் [ மார்ச் - 10 - 2014 ]

http://www.yaavarum.com/archives/2228 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக