வியாழன், மே 29, 2014

நிச்சலனம் சுழித்தோடும் யாமம்

*
அதீத அந்தரங்கத்தோடு கமழ்கிறது பின்னங்கழுத்தில் பதிந்த முத்தம்
கைவளையில் நெருடும் விரல் நுனி
மணிக்கட்டு நரம்பின் மீது ஊர்ந்தபடி ஆரம் கூட்டுகிறது

காது மடல் உரசும் காற்றின் மூச்சில் சிறகு வளர்கிறது
யாமத்தின் அடர்ந்த இருளை ஏடிழைப் பிரித்து வெளிச்சமூட்டும் சிணுங்கல்

கோத்ததில் நெளியும் ஆலிலைப் பரல்களை அசைக்கிறது இதழ்
வெப்பம் வளரும் மச்சத்தை நெகிழ்த்தும் இந்நொடி
பூ மடல் உதிர அணைக்கும் நெருக்கத்தை வார்ப்பதில் வளையும் புன்னகை

கரைந்து போதல்
கலந்து கரைதல்

சுவாசச் சுடர் தூண்டி அசையும் நிச்சலனக் காமம்
பார்வை வனமேகி முயங்கும் உயிர்ப்பறவை தீண்டும் அலகில் காதல்

பத்து விரல் பற்றி நெஞ்சிறுகப் பதியும் நெற்றிப்பிறை
இடவலம் நகரும் சுட்டியில் ஆடும் முத்தம்

நீ மௌனம்
நீ நதி
நீ சங்கு
நீ பிறவி
ஊழிப் பிரளயப் பெருக்கில் சுழித்தோடும் இக்கூடல்
பாதக் கோலம் துளிர்த்து கரையேறி கட்டில் மேல் உயரும் நாணல்

சகி
ப்ரிய சகி
துடிப்படங்கும் அனல்மூச்சு அள்ளித் திருகி தைக்கும் தேகம்
இக்கடல் நுரைத்து முகில் உரிக்கும் உன் வைகறை

நான் பட்சி - என் சிறகு
படபடத்து இசை ஊதி இருள் புலர மீள் கவ்வும் அதே காமம்

*****


நன்றி : ' யாவரும்.காம் ' இணைய இதழ் [ மார்ச் - 10 - 2014 ]

http://www.yaavarum.com/archives/2228 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக