வியாழன், மே 29, 2014

சுழியிட்ட நம்பர் கரைந்து அழிகிறது..

*
மழைப் பெய்து கொண்டிருக்கிறது
மழைக் கவிதை ஒன்று எழுத வேண்டும்

தாய்ப் பூனையின்
கழுத்தைக் கட்டிக்கொண்டு
தூளியாடுகிறது குட்டிப் பூனை

பழைய சீமை ஓடு வேய்ந்த கூரையின்
முதுகுப் பாதையில் உருள்கின்றது
நீர் நூல்

பூனையின் பாதங்களுக்குள்
பதுங்கிக் கிடக்கும் கூர்நகங்கள்
உரிக்கின்றது இவ்விரவை

வெளிச்சம் சிந்தும் மின்விளக்குக் கம்பத்தில்
சுழியிட்ட நம்பர் கரைந்து அழிகிறது

தாய்ப் பூனையும் குட்டியும்
அதை எக்கி எக்கி சுரண்டுகின்றன

ஒரு சிறிய அதட்டலில்
நான்கு ஜோடிக் கண்களும் என் புறம் திரும்புகின்றது

நான் அவற்றை இந்தக் கவிதைக்குள்ளிருந்து
விரட்டுகிறேன்
அவை அடம்பிடிக்கின்றன

சூ..!
மழைப் பெய்து கொண்டிருக்கிறது
ஓடுங்கள் இங்கிருந்து

நானொரு மழைக் கவிதை எழுத வேண்டும்

*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக