வியாழன், மே 29, 2014

விரல் நுனியில் கசியும் இரவின் பாடல்கள்..

*
இத்தனை இணக்கத்துடன் இருக்க பழக்குகிறாய்
வார்த்தைகளில் ஏந்திக் கொண்டு எனது இரவைப் பூக்கச் செய்கிறாய்

சிறகுகள் வளர்ப்பதைப் பற்றி சொல்லித் தருகிறாய்
நமக்கென பிரத்யேகமாக ஒரு வானம் வரைந்து கொள்வோம் வா
என்று அழைத்துப் போகிறாய்

நீ அறிமுகப்படுத்தும் பள்ளத்தாக்கு முழுவதும்
இரைந்து கிடக்கும் வண்ண மலர்களை
இதற்கு முன் நான் கண்டதில்லை

விடிய மறுக்கும் ஜாமத்தின் ஒவ்வொரு நொடிக்குள்ளும்
ஒளிந்து கொண்டிருக்கிறது அதன் வாசம்

உன் உள்ளங்கை மீது நான் எழுதும் இந்த மௌனத்தை மொழிபெயர்க்க
என் விரல் நுனியிலிருந்து கசியும் பாடல்களை
நீயுன் உதடுகள் கொண்டு ஒற்றியெடுத்து பாடுகிறாய்

நான் நிறைந்து மிதந்தபடி
இத்தனை இணக்கத்துடன் இருக்கும் இந்தப் பொழுதுகளை
உனக்குப் பறித்துத் தருகிறேன்

நீயொரு முத்தத்தை என் காது மடலில் மலரச் செய்கிறாய்

*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக