வியாழன், மே 29, 2014

வர்ணம் பிறழாமல் அடைகாத்த துயரம்

*
ஒரே ஒரு முறை பொழிவதற்காகக் காத்திருந்த
மழையின் சாரலை ஏந்த
சாலையில் உதிரும் மஞ்சள் நிறப் பூக்களின்
காம்புகளில் கசிகிறது
என்றோ பேசித்திரிந்த பால்யத்தின் துளி ஈரம்

நீ
வரிசைப்படுத்தி சொல்லிக்கொண்டே வந்த பட்டியலில்
துருத்தியபடி நெளிகிறது ஒரு விட்டுக்கொடுத்தலின் நிறம்
மௌனம் பழகு என்று கதறும் குயிலின் குரலில்
காகத்தின் பசியொலி தெறிப்பதாகச் சொன்னாய்

அப்படித்தான் முடைந்து வைத்திருந்தேன் எனது கூட்டை

வர்ணம் பிறழாமல் அடைகாத்த முட்டைக்குள்
கருக்கொண்ட நினைவுகளின் சிறகுகளை
கொஞ்சமேனும் நனைக்குமா
இந்தச் சாரல்

உதிர்ந்த மஞ்சள் பூக்களின் நரம்புகள் மீட்டுகிறது
என் துயரத்தை
ஈரச்சாலையின் நெடுக பரவுகிறாய்
குயிலின் குரலென

****

நன்றி : கல்கி வார இதழ்  [ ஏப்ரல் - 13 - 2014 ]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக