வெள்ளி, ஜூன் 27, 2014

அது ஒரு வாதம் மட்டுமே என்கிறாய்..

*
நீ
என்ன சொல்லுகிறாய்
முத்தமிடு என்கிறாய்

நீ
என்ன சொல்லுகிறாய்
பரிதவிக்கச் செய் என்கிறாய்

நீ
என்ன சொல்லுகிறாய்
உனக்குள் என்னைப் புதை என்கிறாய்

நீ
என்ன சொல்லுகிறாய்
கனவைத் தீ வைத்து கொளுத்து என்கிறாய்

நீ
என்ன சொல்லுகிறாய்
மரணத்துக்கு இட்டுச் செல் என்கிறாய்

நீ
என்ன சொல்லுகிறாய்
எந்தவொரு காரணமும் உன்வசம் இல்லை என்கிறாய்

நீ
என்ன சொல்லுகிறாய்
அது ஒரு வாதம் மட்டுமே என்கிறாய்

நீ
என்ன சொல்லுகிறாய்
இத்தனை அல்லல் ஓர் அவஸ்தை
என்னைப் புறக்கணி என்கிறாய்

நீ
என்ன சொல்லுகிறாய்

முத்தமிடு என்றுதானே
பரிதவிக்கச் செய் என்றுதானே
கனவைத் தீ வைத்துக் கொளுத்தி
உனக்குள் என்னைப் புதை என்றுதானே
மரணத்துக்கு இட்டுச் செல்லும் வழியில்
எந்தவொரு காரணமும் கைவசம் இல்லை என்றுதானே
இத்தனை அல்லலும் ஓர் அவஸ்தை
எனவே
உன்னைப் புறக்கணி என்றுதானே

இவை ஒரு வாதம் மட்டுமே
என்றான பிறகு
அனைத்தும் முளைக்கும் நிலம் ஒன்றை
உழத் தொடங்குகிறேன் சொற் கூர் கொண்டு

அன்பே
நீ உரமாகிச் சாகும்போது
உன்னை முத்தமிடுவேன்

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக