ஞாயிறு, ஆகஸ்ட் 31, 2014

பக்குவம் பிசகிவிடும்போது சரடாகி மின்னும் மௌனம்..

*
எப்போதும் போலவே அப்போதும் இருக்கலாம்

இனி பறிப்பதற்கு பூக்கள் மிச்சமில்லை
என்றபோதும்
செடி இருக்கவே செய்கிறது

ஓர் அனுமதியின் இறுதியில் உருவாகும் எதிர்பார்ப்பு
அனுசரணை மட்டுமே என்றாலும்
ஒத்துவராத பட்சத்தில்
வெளியேறிவிட வாசல்கள் உண்டு

காயங்கள் மீது பூசப்படும் அன்பை
சொற்கள் கொண்டு குழைக்கும் லாகவத்தில்
பக்குவம் பிசகிவிடும்போது
துளிர்க்கும் கண்ணீரைக் கண்டு ஏன் அஞ்ச வேண்டும்

எப்போதும் போலவே அப்போதும் இருக்கலாம்

ஒரு முத்தம் தொடங்கும் நொடியில்
மௌனம் சரடாகி மின்னும் போது
அவ்வளவு கலக்கம் கொள்ளத் தேவையில்லை

இறுக அணைத்துக்கொள்ள தோன்றும் சூழலை
தேர்வு செய்யவோ கையாளவோ முடியாமல் போவதின்
இறுக்கத்தை
விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை

மிக அருகிலிருந்து பார்க்க நேர்ந்த ஒரு மரணத்துக்குப் பிறகு
ப்ரியமானவளை புணரத்தூண்டும்
ஹார்மோன்களை
நொந்துக்கொள்ள வேண்டியதில்லை

எப்போதும் போலவே
அப்போதும் இருக்கலாம்

ஒன்றுக்கும் மற்றொன்றுக்குமான வித்தியாசங்களின்
இடைவெளிக்குள்
சஞ்சரித்து தவிக்கும் மௌனத்தை எதிர்கொள்ளும்
அசௌகரியம்
என்பது

எப்போதும் போலவே அப்போதும் இருக்கலாம்

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக