வியாழன், ஜனவரி 21, 2010

நினைவுகளின் பெருங்கசப்பு..!

*

என் பதற்ற நிமிடங்களின் இந்த இரவை
எனக்குப் பரிசளித்தன
முன் மாலையில் நீ உதிர்த்த சொற்கள்..

ஒரு கை கூப்புதல்..
ஒரு கை தழுவுதல்..
நமுட்டு புன்னகையொன்று..
இப்படியான சாயல் கொண்ட ஒரு செயல்
என்னிடமும் உண்டு..

மழை நீர் தேங்கிய சிறு குட்டையில்
மிதக்கின்றன..
உன் பகல்களும்..என் கேவல்களும்..

அதை ஊடுருவிக் கடக்கிறது
பேரிரைச்சலோடு ஒரு சந்தர்ப்பம்..

மீண்டும் பொழியும் சொற் மழையில்..
நனைகின்றன என் கேவல்களும்..உன் பகல்களும்..

உடன்பட்டுவிட முடியாத...பொழுதுகளை..
லாவகமாக சமைக்க முடிகிறது எப்போதும் உன்னால்..
அவசரப்பட்டு ருசித்து விடும் நாவில்..
ஊறி வழிகிறது...நினைவுகளின் பெருங்கசப்பு..

ஒரு கையசைப்பில்
போதுமென்று..
விலகிவிட முடியாத..செயலை..
இறுகப் பற்றிக் கொள்கிறது..
முன் மாலையில் நீ உதிர்த்த சொற்கள்..

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) ஜனவரி - 2010

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2398

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக