ஞாயிறு, ஜனவரி 31, 2010

வழிப்போக்கனும்..மற்றுமொருவனும்..

*

காரைப் பெயர்ந்த
உள்ளறைச் சுவர் போல
குடலில் தங்கிவிடுகிறது..பட்டினி..

நியாயத் தர்க்க கரைசல்களை
விழுங்குவதால்..
அதொன்றும் ஜீரனமாகிவிடுவதில்லை..

தத்துவங்களை
யதார்த்த நுனியில் செருகி
தூண்டிலிடும்படி
ஒரு யோசனைச் சொல்லிப் போகிறான்
வழிப்போக்கன்..

நகர வீதியெங்கும்
தேங்கிக் கிடக்கும்
அரசியல் குட்டைகளுக்கு
பலத்த காவல் இடப்பட்டிருக்கிறது..

தேடியலைகிறேன்
ஒரு ஓடையை..

நெடுஞ்சாலையில்
நீர் நிலையொன்றைப் பார்த்ததாக
கையசைத்து விலகினான்
மற்றுமொருவன்..

சிவப்பு விளக்கொழுக
வெண்மை வெளிறி..
வேகமாய் உருளும்..
மகாராஜாக்களின் தேர் சக்கரங்களுக்குக் கீழே
சிதறிக் கொண்டிருக்கிறது..
கானல்..

காரைப் பெயர்ந்த உள்ளறைச் சுவர் போல
குடலில் நிரந்தரமாய்த் தங்கி விடுகிறது..
பட்டினி..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக