வியாழன், பிப்ரவரி 27, 2014

மழையற்று வெறிச்சோடும் மௌன அந்தரத்தில்..

*
நீண்ட நாட்களுக்குப் பிறகு
உன்னை ஒரு முறை நினைத்துக் கொள்கிறேன்
ஞாபகத் தீவின் ஒற்றையடிப் பாதையில்
நீ விட்டுச் சென்ற கால் தடங்கள்
எண்ணற்ற பருவங்களுக்குப் பிறகும்
பத்திரமாய் இருப்பதை வியக்கிறேன்

மழையற்று வெறிச்சோடும்
எனது மௌன அந்தரத்தில்
வெண் மேகமாய் கடந்து போகிறாய்

உனது வடிவங்களின் மாற்றத்திலிருக்கும்
சூட்சுமம் பிடிபடுவதில்லை

மொட்டைமாடி கைப்பிடிச் சுவரில்
சிமென்ட் பூச்சு விலகி உறுத்தும்
இறுகிய மணல்துகளின் நிரடலாகிறாய்
வெயில் விழாத மாலை நேரங்களில்

நீண்ட நாட்களுக்குப் பிறகு
உன்னை ஒரு முறை நினைத்துக் கொள்ள நேரும்
இந்த இரவின் முகம்
இடையறாத கணந்தோறும் வெவ்வேறு தோற்றத்தில்
வரைந்து கொண்டே இருக்கிறது

கடைசியாக நீ எனக்குத் தந்து சென்ற உனது
முக பாவனையை

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ஜூலை - 23 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5786

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக