வியாழன், பிப்ரவரி 27, 2014

உதிர்ந்த மஞ்சள் பூக்களின் நரம்புகள்..

*
ஒரே ஒரு முறை பொழிவதற்காக
துடித்த மழையின் சாரலை ஏந்தக் காத்திருக்கும் சாலையில்
உதிரும் மஞ்சள் நிறப் பூக்களின் காம்புகளில் கசிகிறது
என்றோ பேசித்திரிந்த பால்யத்தின் துளி ஈரம்

நீ
வரிசைப்படுத்திச் சொல்லிக் கொண்டே வந்த பட்டியலில்
துருத்தியபடி நெளிகிறது ஒரு விட்டுக் கொடுத்தலின் நிறம்
மௌனம் பழகு என்று கதறும் குயிலின் குரலில்
காகத்தின் பசியொலி தெறிப்பதாகச் சொன்னாய்

அப்படித் தான் முடைந்து வைத்திருந்தேன் எனது கூட்டை
வர்ணம் பிறழாமல் அடைகாத்த முட்டைக்குள்
கருக் கொண்ட நினைவுகளின் சிறகுகளைக் கொஞ்சமேனும்
நனைக்கும் இந்தச் சாரல்

உதிர்ந்த மஞ்சள் பூக்களின் நரம்புகள்
மீட்டுகிறது என் துயரத்தை

ஈரச்சாலையின் நெடுகப் பரவுகிறாய்
குயிலின் குரலென

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ மே  - 21 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5617

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக