வியாழன், பிப்ரவரி 27, 2014

மரணத்தை ஒத்த நொடியின் இழைகள்

*
உதடுகளோடு உதடுகள்
கவ்வ நேர்ந்த அவ்விரவை
முத்தமென்று பெயரிட்டழைத்தாய்

ஸ்பரிஸ பரிமாறலில்
உயிர் வெட்டி உயிர் நிரப்பிய கனத் தருணத்தை
ஆலிங்கனமென்றேன்

நழுவி உடைந்த உன் புன்னகையின் நிறம்
அறையெங்கும் வழிந்தது

மரணத்தையொத்த நொடியின் இழைகள்
அறுந்துப் பின்னிய உச்ச சூழில்
பித்தேறுகிறது மகரந்தத் துகளின் மஞ்சள் புள்ளிகள்

உன்
கண்கள் வெறித்த நீல விளக்கொளியில்
சுவர் பற்றி வெகுநேரம் அசையாமல் உட்கார்ந்திருக்கிறது
வழி தப்பி வந்துவிட்ட ஒரு சாம்பல் நிறப் பட்டாம்பூச்சி

நீ
முத்தமென்று பெயரிட்டழைத்த அவ்விரவுக்கு
அதன் சிறகிருந்தது

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ஜூன்  - 25 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5717

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக