வியாழன், பிப்ரவரி 27, 2014

நங்கூரமிட்டு தனித்து ஆடிக் கொண்டிருக்கும் மௌனம்

*
நான் அதை
விளங்கிக் கொள்ளத்தான் வேண்டுமா

சிலந்தி வலையில் சிக்கிக் கொண்ட ஒரு
சின்னஞ்சிறு தும்பியின் மரணத்தை

பசியோடு அலையும்
புலியொன்றின் கண்களை

காலங்காலமாய் ஏங்கிக் கூவும்
குயிலின் குரலை

நீரின்றி வறண்டு வெடித்திருக்கும் குளத்தை

ஒவ்வொரு ஊரின் எல்லையில்
யாருக்கோ காத்துக் கிடக்கும் சுமைதாங்கியை

துணிச்சலை உதிரச் செய்யும் உனது சிறகை
நங்கூரமிட்டு தனித்து ஆடிக் கொண்டிருக்கும் உன் மௌனத்தை
பொழிய மனமற்று கடந்து போகும் என் மேகத்தை

நான் விளங்கிக் கொள்ளத்தான் வேண்டுமா
என் தனிமையின் மீது ரகசியமாய்
நீ தீட்ட நினைக்கும் வர்ணத்தை

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஆகஸ்ட்  - 6 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5843
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக