திங்கள், ஏப்ரல் 21, 2014

நீண்ட பாதையின் முடிவில் உயரும் சுவர்கள்

*
முற்றுப் புள்ளியிலிருந்து மீளும் பேனா
எழுதி முடித்த வாக்கியத்தை நோக்கி
வீசுகிறது தனது பெருமூச்சை

தத்துவமொன்றின் சாடலாக
கட்டுடைந்து சிதறும் கோட்பாட்டுக் கனவாக
சிக்கலுற்ற வேர் நெடுக வழியும் நீர்த்துளியாக

பற்றுதலுக்கு தயங்கும் மௌனத் தவிப்பெனவும்
உள்ளூரக் கிளர்த்தும் பன்முகச் சிலிர்ப்பெனவும்
நீண்ட பாதையின் முடிவில் உயரும் சுவரெனவும்

புள்ளியிலிருந்து பெயர்ந்து
மறுபுள்ளி நோக்கித் தொடங்கும் பயணத்தின்
ரகசியங்களோடு திணறும் மொழியின் தருணங்கள்
கண்ணாடிப் பேழையாகி வீங்குகிறது
பெருமூச்சின் உயிர்ப்பை மையமிட்டு

****

நன்றி : ( மலைகள்.காம் ) [ ஜூன் - 17 - 2013 ]

http://malaigal.com/?cat=8&paged=9

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக