புதன், ஏப்ரல் 30, 2014

உரசிக்கொண்டு பற்றியெரியும் உரையாடலின் சாம்பல்..

*
அயற்சியோடு நடக்க வைத்துவிட்டாய்
தீர்மானங்கள் பலிப்பதில்லை
தனிமைப் பயணத்தில் அதுவொரு சுமை
திரும்பிப் பார்க்கத் தூண்டுவதாய் இல்லை உன் குரல்

நிறைய வாசித்தாயிற்று
நிறைய களைப்புறச் செய்துவிட்டன உன் வரிகள்
பிதற்றலும் கதறலுமாய் அலறும் பைத்தியக் கணங்களோடு
நிழல் வலை வீசுகிறாய்
சிறு விரலசைவில் அவை அறுகின்றன

என்னை எட்டிப்பிடிக்க துரத்தும் உன் காலடியோசை
வேறொரு கிரகத்திலிருந்து கேட்டுக்கொண்டே இருக்கிறது

எதை நம்புகிறாய்
உனது பிரத்யேக ஒற்றை விண் கல்லையா

கோடி நட்சத்திரங்களை வாரி இறைக்காமல்
கனக்கும் என் பையோடு
மேலும் நடந்தபடியே இருக்கிறேன் தீர்வதாயில்லை இந்த அயற்சி

காற்றில் வீசியெறிந்த
உன் சமரச வெண் துணியொன்று பற்றியெரிந்து சாம்பலாகிறது
உரசிக்கொண்ட உரையாடலின் பொறிப் பட்டு

உணர்கொம்பில் சுழல்கிறது ஊழிக்காற்றைப் பொருத்தும் மூச்சு
உறுதியான கால்கள் கொண்டிருக்கிறேன்
இறுகும் தசை சபிக்கிறது

முன்பு குடித்த தேநீரின் கசப்பை இன்றையத் தொண்டைக்குழி
திரளச் செய்கிறது
வெட்டியெடுக்காத பெருமலையை

அடுத்தடுத்து அமையவேண்டாம் மேலும் மேலும் ஓர் அண்மை
நடக்க நடக்க ஓயாத அயற்சி
தன் பகலை
சட்டென்று அணைத்துவிட்டது

பெருகும் திசையற்ற இந்த இருள் பிடித்திருக்கிறது

உன் சொற்கூச்சலை வேடிக்கைப் பார்க்கச் சொல்லி
இரண்டு காதுகளையும் அறுத்து வைக்கிறேன்
வான்கோவின் கத்திக்கொண்டு

நெருங்கும்போது அதை எடுத்துக்கொள்

*****

நன்றி : ' யாவரும். காம் ' இணைய இதழ் [ டிசம்பர் - 21 - 2013 ]

http://www.yaavarum.com/archives/1758

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக