புதன், ஏப்ரல் 30, 2014

கோட்டோவியத்திலிருந்து வெளியேறும் பட்டாம்பூச்சி..

*
அசையும் ஜன்னல் திரைச்சீலையின் இளநீல நிறத்தில்
சிக்கிக்கொண்ட ஒரு வெண் பூச்சித்திரம்
தான் பருகிய வெயிலை என் மீது ஊற்ற

நான் உட்கார்ந்திருக்கிறேன்

மலர்ந்து மொக்குடைதலின் வாசத்தை
நேற்று நீ எனக்குப் பரிசளித்தாய்

பூக்கள் சிந்தும் ஈரச்சாலை முழுதும் மின்னும்
தெருவிளக்கின் மஞ்சள் வர்ணத்தை உன்
பாத கொலுசு மீட்டிக் கொண்டிருந்தது

தொலைவிலிருந்து நம்மை யார் பார்த்திருந்தாலும்
நாமொரு கோட்டோவியமாகத் தான் தெரிந்திருப்போம்

நீ அழுந்த தந்த ஒரு சிறிய முத்தத்தால்
என் இரவின் பால்வீதியில் மேலும் இரண்டொரு கிரகங்கள்
சுற்றத் தொடங்கின உன்னை நோக்கி

நம் ரகசிய கதவின் தாழை நீக்கும் நொடியில்
சட்டென என்னிலிருந்து சிறகசைத்து வெளியேறுகிறது
உன் பட்டாம்பூச்சியொன்று

இந்த அறை ஜன்னலின் வெண்பூச்சித்திரம் என் மீது
ஊற்றும் வெயிலைப் பருகியபடி
நான் வெறுமனே உட்கார்ந்திருக்கிறேன்

நீயந்த பட்டாம்பூச்சியாய் திரும்பி வர

*****

நன்றி  : ' தீராநதி ' இலக்கிய மாத இதழ் [ நவம்பர் - 2013 ]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக