புதன், ஏப்ரல் 30, 2014

மழையாக ஒரு தீவில் பெய்தல்..

*
யாரும் இணக்கமாயில்லை
வலுவிழக்காத புயலாகி தலைக்குள் சுழலும் காற்றில்
அத்தனைக் குப்பைகளையும் ஒருசேர
தரிசிக்கச் செய்கிறது சூழல்

அத்துனை துயரங்களின் பள்ளங்களும்
நிரம்பி வழிகின்றது
நிலத்தை அழுத்தி ஊன்றி நிற்கும் கால்களைப் பெயர்க்கிறது
சூறை

உறவிலிருந்து விடுபட அழைக்கும் மேகம்
வேறொரு தேசத்துக்கு
முற்றிலும் துண்டுப்பட்ட தீவுக்கு இழுத்துப் போகக் கூடும்

வேண்டப்படாத
மழையென எங்காவது இறக்கிவிட்டே தீரும்

பெயரற்ற அநித்தியப் பிரதேசத்தில் நாறி
பருக உயிர் அற்று
தேங்கிக் கிடக்க முடியாது காற்றே

பாதங்களின் கீழ் முளைத்துவிட்ட ரகசிய வேரை
ரத்தம் சொட்ட பற்றிக் கொண்டிருக்கிறது என் நிலம்

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக