வியாழன், பிப்ரவரி 27, 2014

யாரோ ஒருத்தியின் பெரிய கண்கள்..

*
ஒரு மழை நாள் மின்வண்டி பயணத்தில்
ஜன்னல் கம்பிகள் அழுந்த கன்னம் சாய்த்து
பயணித்த யாரோ ஒருத்தியின் பெரிய கண்கள்
ஊடு கண்ணாடித் திரையில் நுண் புள்ளி நீர்த்துளிகளையும்
வளைக்கோடாகி காற்றில் நெளியும் அதிவேக காட்சிகளின்
துல்லியமற்ற குழப்பத்தையும் வெறிக்கும் கணம்

நினைவுப் படுத்துகிறது

கைவிடப்பட்ட ஒரு தனிமையில்
துணையிருந்த அறைச் சுவரை

பைத்திய மனதில் விட்டெறிந்த நம்பிக்கை கற்கள்
உண்டு பண்ணிய சலன வளையத்தை

பேரிரைச்சல் ததும்பும் வனாந்திர நதியைத் தொட
கரையோரம் உதிரும் மஞ்சள் நிற இலையை

அழைத்தும் வராத காகத்தின் உணவுக்காக
மருண்டபடி மரத்தில் பதுங்கிக் காத்திருந்த அணிலை

இன்னும் கொஞ்சம் நீளாதா என
ஏங்க வைத்த ஒரு ஷெனாய் இசையின் துயரத்தை

நினைவுப் படுத்துகிறது
ஸ்தூலமற்ற கணத்தை வெறிக்கும்
யாரோ ஒருத்தியின் பெரிய கண்கள்

வர்ணமற்று உமிழும் வெளிச்சப் பரப்பின் அபத்த நிழலோடு
அது
என்றென்றைக்குமான ஓர் அணையா விளக்காக
தொங்கிக் கொண்டிருக்கிறது
நினைவின் கூரையில்

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஆகஸ்ட்  - 6 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5843
 

1 கருத்து: