வெள்ளி, ஜூலை 30, 2010

ஆயாசத்துடன் முளைக்கும் ஒரு பகல்..

*
ஆயாசத்துடன் முளைக்கும் ஒரு பகலை
வேரோடு கிள்ளி எரிய
தேடவேண்டியிருக்கிறது
நேற்றைய இரவின் சிறு விரல்களை

அது தன் மீது எழுதிச் செல்லும்
தருணங்களை கைப்பிடி நிழலுக்குள்
ஒளித்துவைப்பது சாத்தியமில்லை

கண் கூசி..
மன இடுக்குக்குள் பதுங்கிக்கொள்ளும்
சாமர்த்தியத்தை பழகி வைத்திருக்கின்றன
கொடும் பகல்கள்

மழையற்ற நகரத்து வெறிச்சோடுதல்
நம்பும்படியான ஒரு ஈரத்தை
எப்போதும் வழங்குவதில்லை

அன்றாடம் தீவுகளிலிருந்து புறப்படும்
இரண்டு கால் பிராணிகளின்
வால்கள்
நூற்றாண்டுகளுக்கு முன் நறுக்கப்பட்டும்..

ஆயாசத்துடன் மலரும் இந்த இரவையும்
துண்டித்து வீச..
தேடவேண்டியிருக்கிறது
நேற்றையப் பகலில் நிகழ்ந்த
ஒரு
கூர்மையான உரையாடலை..

****

நன்றி : ' வார்ப்பு ' இணைய இதழ் ( ஜூலை - 14 - 2010 )

http://www.vaarppu.com/view/2226/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக