வியாழன், டிசம்பர் 17, 2009

முட்புதர் மண்டிய நெருஞ்சிக் காடு..

*

காட்சிகளை உருவாக்குபவன்
என்
பக்கத்து இருக்கையில்
உட்கார்ந்திருக்கிறான்.

பனி அடர்ந்த
ஒரு மலைச் சரிவில்..
கைகளை இறகுகள் போல விரித்து
நான் ஓடும்
ஒரு காட்சியை எடுத்து
என் மடியில் வைத்தான்..

மிகவும் குளிர்வதென்பது
என்னுடைய ஆஸ்துமா தொல்லையைத்
தூண்டும் செயலென்று சொல்லி
அதை நிராகரித்தேன்..

பசுமையை ஓவியமென..
சுற்றிலும் தூரிகையிட்டிருந்த
ஒற்றையடிப் பாதையின்
இறுதி நுனியில்..
நான்
தனியனாக உட்கார்ந்திருக்கும்
காட்சியை எடுத்து நீட்டினான்..

வெகுநேரம் ஒரே இடத்தில்
தங்கும் பொருட்டு
என் கால்கள்..
ரத்தம் சுண்டி
சொரனையிழந்துவிடுவேனென்று
மறுத்துவிட்டேன்..

முட்புதர் மண்டிய
நெருஞ்சிக் காட்டுக்குள்
உடலெங்கும் கிழித்துக்கொண்டு
சிதைந்தழுகிய ரணத்தோடு
நான் அலறும்
காட்சியொன்றை இம்முறை
என் கையில் திணித்தான்.

' ஐயோ...!
எப்படி தாங்குவேன் இவ்வலியை..?
விடுவி..
எனனை முதலில்..' - என்றேன்
பதறியபடி..

'ஆனால்...
இது தான் உனக்கானக் காட்சி
இதிலிருந்து நீயாகவே..
பிதுங்கி வெளியேறு..
உன் நிறுத்தம் வந்துவிட்டது..' -
என்றபடி..நிதானமாக
மறைந்து போனான்..

பேருந்து
தன் நிறுத்தத்தினின்று
அம்பது அடி
தள்ளி நின்றது..
கசகசவென...வியர்வை நாற்றத்தோடு..!

*****

1 கருத்து: