புதன், டிசம்பர் 30, 2009

பால் நதியென நெளியும் மெழுகு...!

*

வெம்மை மிகுந்த
கோடை இரவொன்றின்
குளிரை..

தன் பார்வையில்..
அப்பிக் கொண்டு..
என்
அறையின் தனிமையில்..
உட்கார்ந்திருக்கிறாள்...

புத்தக அலமாரியில்..
முதுகுத் திருப்பி
நின்றுக் கொண்டிருக்கும்..
புத்தகங்களை...

மௌனமொன்று
நெருடிக் கொண்டிருப்பதை..

ஜன்னலின்
திரைச் சீலை அசைந்து அசைந்து
ஒத்துக் கொள்கிறது...

மெல்ல மயங்கும்..மின் விசிறியின்..
நீண்ட இழைகள்...

இல்லாத காற்றை...

துண்டு துண்டுகளாக நறுக்கி..
அறையின் இருள் மூலைகளில்..
தூக்கி எறிந்து..

அவளைக் குறிப்பெடுத்தபடி
சுழல்கின்றன..

ஈரம் சொட்டும் கூந்தல் நுனியை...
ரகசியமாய்
முத்தமிட்டு சுகிக்கிறது..
ரத்த நிற பட்டுக் கம்பளம்..

மேஜையில்...எரிந்து உருகி...
பால் நதியென நெளியும்..
மெழுகு...
விளிம்பைக் கடந்து..

அந்தரத்தில் உறைகிறது..
அவளைப் பார்த்த நொடியில்...

பஞ்சுப் பொதிகைத் துவாலை யொன்றை
உள்ளறையிலிருந்து...
எடுத்து வந்து நீட்டிய கணத்தை..

எழுந்து நின்று..

குழல் வாசித்து உதிர்த்தாள்..
'நன்றி' - என மென் இதழ் அசைத்து..

அலமாரிப் புத்தகங்கள்
மொத்தமும்..
அவளின்..
அடர் கரிய நிழலில்
பதுங்கிவிட்டது..

அறை முழுதும்..

இல்லாத காற்றை
இன்னும்..
துண்டு துண்டாய் நறுக்கிக் கொண்டிருக்கிறது...

விட்டுவிடும் மனமில்லா
மின்விசிறி இழைகள்...!

****

1 கருத்து:

  1. chance-less...

    stunning...

    excellent...

    awesome...

    ippadi innum ennalaam vaarthaikal irukkiratho athanaiyum pottuvittu meendum inkeye nirkiren............. :-))))))))))))))

    பதிலளிநீக்கு