புதன், டிசம்பர் 30, 2009

மழைப் பொழியும் சப்தங்களை சிதறடித்துச் சிரிப்பவன்

*

செய்வதறியாது
தலைப் பிடித்து உட்கார்ந்திருக்கிறது துயரம்..

நகர மறுத்து..
கடிகாரங்களின் நொடிமுள்
ஒரே இடத்தில் துடித்துத் திகைக்கிறது.

சிக்குப்பிடித்து கலைந்த அழுக்குக் கேசமும்
திட்டுத் திட்டாய் கறுப்பேரிய மெலிந்த உடலும்
வலது புருவமோரம் வெட்டுத் தழும்பும்..
சாம்பல் பூத்துவிட்ட கந்தல்..கால்சராயுமென..

முன்னிரண்டும் உடைந்து போய் மீந்த
மொச்சைப் பற்களின் மஞ்சள் நிறமுமாய்..

சிரிக்கிறான்..
சிரிக்கிறான்..
இடி இடித்து மழைப் பொழியும் சப்தங்களை
தனதாக்கி சிதறடித்துச் சிரிக்கிறான்...

செய்வதறியாது...
நகர மறுத்து..
அவனருகே..
தன் தலைப் பிடித்து உட்கார்ந்திருக்கிறது துயரம்..

நிமிட முட்கள் வெடித்து நொறுங்கி...
நொடிமுள்..
ஒரே இடத்தில் துடித்துத் திகைக்கிறது...
யுகங்களை விழுங்கி..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக