செவ்வாய், டிசம்பர் 01, 2009

குறுக்கு வெட்டு..

*

ரமணி டீச்சரின்..
கையிலிருக்கும்..
மர ஸ்கேலில்..
புதைந்து கிடக்கும்..
எண்களை...
வாசிக்கப் பழகும் கணத்தில்..
புறங்கையில்...விழுந்துவிடும்..
பட்டென்று ஒரு அடி..

அறிவியல் வகுப்பு வரை
வலிக்கும் அதன் காரணத்தை...
அறிவியல் துணை கொண்டு
விளக்கும்படி..
ராமச்சந்திரன் மாஸ்டரைக்.. கேட்டதால்..
காது நுனி திருகப்பட்டு
சிவந்ததை..

கடைசி வகுப்பான
தமிழில்...
நெருடியபடி
புத்தகத்தில் ஆழ்ந்ததைக் கவனித்த..
மலர்க்கொடி டீச்சர்..

புத்தகப் பக்கத்தை கவனித்து..
புருவம் உயர்த்தி..ஆச்சரியமாய் கேட்டார்..
' கவிதை பிடிக்குமா உனக்கு..?'
பயத்தில்...
'ஆமா..' என்பதாக தலையசைத்த நொடியில்..
தலை கோதி... நகன்றதும்..

பிரித்திருந்த புத்தகத்தில்...
பாரதியின் வரிகள்..
என்னைக் குறுக்கில் வெட்டின..

*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக