புதன், டிசம்பர் 30, 2009

துயரங்களின் சுண்டுவிரல் (அல்லது ) என் தெருவை..

*

என்
தெருவை ஒரு துயரம்
நடந்து கடக்கிறது..
அதன் சுண்டு விரல் பற்றி..
பின் தொடர்கிறது மரணம்..

ஒரு சிறுமி..
சடைப் பின்னலை சரிசெய்தபடி..
தன் அம்மாவின்
முந்தானையைத் தவறவிடுகிறாள்..

நாய்க்குட்டி யொன்று
தன் சுருண்ட வாலின் முனையை
கவ்வி விட முயன்று கொண்டே இருக்கிறது..

தள்ளாடி நகரும்..
வயோதிகன் ஒருவனின்..
குனிந்த தலை..மறைத்துவிடுகிறது
அவன் இதுவரை அசைப்போட்டு..
துப்பிவிட்ட காலத்தின் தாடையை...

என் தெருவை..
எப்போதுமே...ஏதாவது ஒரு துயரம்
கடக்க நேரும் நிமிடங்களில்..
அதன் சுண்டு விரலைப் பற்றிக் கொள்ளத்
தவறுவதில்லை..
ஒரு மரணமோ..அல்லது..
மரணத்துக்கான ஒரு அவசியமோ..!

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) டிசம்பர் - 30 - 2009

http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=2356

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக