வியாழன், செப்டம்பர் 23, 2010

பிரிவுக்குரிய விண்ணப்பங்கள்..

*
பெயர் தெரியா மரங்களிலிருந்து
உதிரும் இலைகள் பழுத்திருக்கின்றன..

ஒரு பிரிவுக்குரிய விண்ணப்பத்தோடு
எவ்வளவு நேரம் தான் காத்திருப்பது..?

இந்த சேலையில் பூத்திருக்கும்
மிட்டாய் ரோஸ் நிற பூக்கள்
அவனுக்கு கொஞ்சமும் பிடிக்காது

காதில் ஏன் இத்தனை பெரிய வளையம் மாட்டியிருக்கிறாய்
என்று ஒரு முறை பிடித்து இழுத்திருக்கிறான்
சிறு ரத்தப் புள்ளியோடு காது துளை
தன் வலியை நிறுத்திக்கொண்டது

ஹாஸ்டல் படுக்கையறைச்
சுவற்றிலிருந்த கடிகாரத்தை
கழற்றி வைத்துவிட்டேன்

அவன் மீசையை நினைவுப் படுத்தும்
நிமிட முட்களும்
உடல் முழுக்க நொடி முள்ளாய்
ஊர்ந்து கடக்கும் இரவும்
எனக்கு பிடிக்கவில்லை

இந்த சிகப்புக் கட்டிடங்கள் நிறைந்த
சட்ட நுணுக்கங்கள் நிறைந்த
சாதுரியங்கள் நிறைந்த
மரங்கள் நிறைந்த
நிழல் நிறைந்த பைக் பார்க்கிங்கில்
அவனுக்காக காத்திருக்கிறேன்

அவன் வந்ததும்
என் டென்ஷனைக் கட்டுப்படுத்த
நகம் கடிக்கத் தீர்மானித்திருக்கிறேன்
நகம் கடித்தல் அவனுக்கு அறவே பிடிக்காது

ஒரு பிரிவுக்குரிய விண்ணப்பத்தோடு
எவ்வளவு நேரம் தான் காத்திருப்பது..?

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ செப்டம்பர் - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3419

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக