திங்கள், ஏப்ரல் 26, 2010

எழுத பயன்படாத கவிதைக்கான சொற்கள்..

*
அளவற்ற நம்பிக்கைச் சருகுகள்
மனம் போர்த்தி
மௌனம் உலர்த்துகின்றன

துண்டிக்கப்படும் கனவுகளின்
சாளரத்திலிருந்து
காற்றென கசிகிறது
பாதி வாசித்து கைவிடப்பட்ட
துரோகத்தின் இசை

பரிந்துரைக்கப்படும்
பாதைகளின் நான்குவழித்
திசைக் குழப்பத்தில்

பாதங்கள் பயணிக்கின்றன
யாரும் அறிந்திராத
ஒற்றையடிப் பாதையில்

உதிரும் பழுப்பு இலைகளின்
நரம்புகள் தொய்ந்து சுருங்கித் தோற்றமளிப்பதில்
கண்டடையாமலே
அதனின்று நழுவுகிறது
எழுத பயன்படாத கவிதைக்கான
சொற்கள்

அளவற்ற நம்பிக்கைச் சருகுகள்
மௌனம் போர்த்தி
மனம் உலர்த்துகின்றன

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( ஏப்ரல் - 10 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=5277&Itemid=139

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக