திங்கள், ஏப்ரல் 26, 2010

சுவாசிக்கும்படி எழுதிச் செல்லும் காற்றின் கட்டளைகள்..

*
கதவடைத்துப் போகின்றன நம் தீர்மானங்கள்..
இருள் தன் தனிமைக்குள் என்னை இழுத்துக் கொள்கிறது..
அல்லது..
உன்னால் நான் அனுப்பி வைக்கப் படுகிறேன்..

சுவாசிக்கும்படி எழுதப்படும் காற்றின் கட்டளைகளை..
நிராகரித்துவிட யோசிக்கிறது மூச்சுக் குழாய்..

என் நியாயத் தர்க்கங்களை..
சுவீகரித்துக் கொள்கின்றது..
நிழலென என்னோடு தங்கி விட்ட என் அவமானங்கள்..

புன்னகை முகமூடியை முகத்தோடு சேர்த்து தைத்துவிடும்
நைச்சியக் கூர்மைகளை...
துரோக ஊசிகள்..தம் காது துளைக்குள் ஏற்றிக் கொள்கிறது..
மௌனமாய்..

மேலும்...பல கதவுகளும் சுவர்களுமாய்..
நீண்டு உயரும்...தருணங்கள்..
வாழ்வின்...முடிவுகளென மேற்கொள்ளப்படும்
தீர்மானங்களோடு... ஒத்துப்போகின்றன..

தனிமை இருளில்..
சுவாசிக்கும்படி எழுதப்படும் காற்றின் கட்டளைகளை..
மறுபரிசீலனை செய்யத் தூண்டுகிறது..
நைச்சியக் கூர்மைகளும்..
காது துளைகளும்..

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ ஏப்ரல் - 19 - 2010 ]

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2806


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக