திங்கள், ஏப்ரல் 26, 2010

நிலவைக் கிள்ளி இரவெங்கும் தூவுதல்..

*
திசைகளை எழுதத் துணிகிறாள் சிறுமி..
பறவைகளின் சிறகுகள் பற்றி..
சிலேட்டில் குறிப்பிட்டுக் கொள்கிறாள்..

வானம் கலைத்து மேகம் வரையும் ஓவியங்களை..
தன் விரல் தூரிகை கொண்டு நகல் எடுக்கிறாள்..

'உஷ்ஷ்..' -என்று உதடுகளை இறுகப் பூட்டி..
இரைச்சல்களுக்குரிய...மௌனச் சாவியை...
மரப் பொந்தொன்றில்..விட்டெறிகிறாள்..

அம்மாவின் முந்தானை வர்ணத்தில்..
சிறைப்பட்டிருக்கும் பட்டாம்பூச்சியை.. இழை பிரிக்கிறாள்..

கிணற்றடி...சலவைக் கல் மீதமர்ந்து..
நிலவைக் கிள்ளி இரவெங்கும் தூவுகிறாள்...

தொலைதூர விடிவெள்ளியொன்றின்...
நுணுக்க மினுமினுப்பில்..
அசைந்து கொண்டே இருக்கிறது..
அவளின் தூங்கும் இரவும்...திறக்கும் கதவும்..!

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ ஏப்ரல் - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2757

1 கருத்து: