செவ்வாய், மே 19, 2009

கானகத்தின் ஒற்றை குரல்..

*

வாசம் வீசும்
பச்சை கொடிச் சிடுக்கில்..
வழிந்திறங்குகிறது
மெல்லிய
பனித்துளி..

சூரிய கிரண விரல்கள்
எழுதுகின்றன
சருகுகளின் முதுகில்
நிழலை..

பழுத்த
இலையொன்றின்
கூர் நுனியில்..

பசுமையாய்
மிச்சமிருக்கிறது
கானகத்தின் ஒரு துணுக்கு..!

சன்னமான
முனகலோடு..
நகரும் ஓடையின்
முகமெங்கும்..

நெளிவுக் குழியிட்டசையும்
கரையோர சிறுமரத்தின்..
மஞ்சள் பூக்கள்..

இதழ் உதிர்த்து
காணிக்கையாகின்றன..

மனிதப் பாதமறியா..
வெளியெங்கும்..

மின்மினிப் பூச்சிகள்
அயர்ந்து உறங்குகின்றன..
நிலவு வரும் வரை..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக