திங்கள், ஆகஸ்ட் 30, 2010

விரல்களிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள்..!

*
நான் அதிசயப்பட்டு அசரும்
ஒரு ஆச்சரியத்தை
நீயெனக்கு பரிசளிக்க மறந்துவிட்டாய்

சாதாரண சந்தர்ப்பங்களன்றி
வேறெதையும் நினைவுகூறும்படி
அமையவில்லை
நம்
சந்திப்புகள்

பெரும்பாலும்
மௌனங்களைப் பின்னிக் கொண்டிருந்த
உன் விரல்களிலிருந்து
உதிர்ந்த
வார்த்தைகளை
சில எறும்புகள் சுமந்தபடி
தம் வளைக்குள் நுழைவதை
என்
அறை மூலையில் கண்டுகொண்டேன்

உண்மையில்
நான் கற்பனித்திருந்தது
வேறாக இருந்தது

நம் சந்திப்பு நிகழ்ந்த மரத்தடியில்
நீ
தவறவிட்டுச் சென்ற வார்த்தைகள்
அடுத்த மழைப் பருவத்தில்
குடைக் காளான்களாக முளைக்குமென்று..

ரகசியங்கள் இடம்பெயர்வதை
ஒப்புக் கொள்ளமுடியவில்லை..!

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஆகஸ்ட் - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3285

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக