*
குத்திட்டு உள்ளேகும் பார்வையில்..
கூர் தீட்டி வைத்திருக்கிறாய்
ஒரு கனவை..
என்
நினைவுச் சுரப்பியின் ஊற்றுக்களில்..
எப்போதும்..
மிதக்கிறது உன் முகம்.
அசைவுகளின் நிழலில்
துணைக்கு
வால் சுருட்டிப் படுத்துவிடுகிறது..
என்னோடு..
உன் புன்னகை..
தொலைவில்..
கடுகென
உன் உருவம் கண்டதும்..
தரையிலிருந்து..
எம்பும் ஒரு பறவையின்
சிறகைப் போல்..
கடலலை நெளிகளில்..
குதிக்கும்...
நூறு நிலவுகள்..!
என்னைப் பார்க்கும் நொடிகளில்..
சிவக்கும் உன் காது மடலில்..
உதிக்க தவறுவதில்லை..
ஒரு
வெட்கச் சூரியன்..!
வீட்டிலிருந்தே..
உதடுகளுக்குள்
பொட்டலம் கட்டிவிடும்
முத்தங்களை..
கடற்கரை
மணல் தட்டி..
கிளம்ப யத்தனிக்கும்..
கணத்தில் தான்..
பரிசாகக் கொடுக்கிறாய்..
எப்போதும்..!
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக