*
நீர்க் கோர்வைகளின்..
அலை அடுக்குகளில்..
குமிழ்விட்டோடுகிறது...
நாம் சிந்திய வார்த்தைகள்..
நதிக்கரையோரம்...
மணல் படுகை நெடுகே..
நெளிந்து நிற்கும் நாணல் நுனிகளில்..
பிசிர் பறக்க.. தலையசைக்கும்..
நம் சிரிப்பொலி..
இலையுதிர்கால மரமொன்றின்..
கருமைக் கிளைகளில்...பொதிந்திருக்கும்...
பெயர் அறியா பறவையின் கூட்டில்..
அடைகாக்கப் படலாம்..
நம் கவிதைகள்.
சிறகு முளைக்கும் பருவத்தை..
எதிர் நோக்கி..
இறுகப் பற்றிய...
என் உள்ளங்கை வெப்பத்தில்..
கனன்று முளைவிடுகிறது உன் நம்பிக்கை..
காதோரக் குழல் ஒதுக்கி..
வில்கூர் புருவ முனை உயர்த்தும் அழகில்..
அந்தி வானில் ஒளித்தீட்டக்
கிளம்பக்கூடும் ஒரு நட்ச்சத்திரம்..
எதிர் வரும் குளிர் இரவின்..
நிழல் விரல்கள்...
தீண்டத் தவிக்கும் நம் பொழுதை..
பத்திரமாய்...சுமக்கும்படி..
நதிக்கரையின்..
கூழாங்கற்களைக் கேட்டுக்கொள்வோம்..
வா..!
மண்டியிட்டு...
நதியை..முத்தமிடலாம்..
*******
அனைத்து வரிகளும் அருமை...
பதிலளிநீக்குகுறுகிய வரிகளின் கருப்பை திறந்து காட்சிகள் பிறக்கின்றன வெகு அழகாக..
அழகான வாசிப்பனுபவம்..