ஞாயிறு, பிப்ரவரி 28, 2010

தெளிவற்ற காட்சி என்னும் குற்றச்சாட்டோடு..புலம்ப நேரிடலாம்..!

*

புதையும் கனவின் ஈரச் சகதிக்குள்..
கால்களை மீட்டுக் கொள்வதான
பிரயத்தனங்களோடு முனகத் தொடங்கியது
ஒரு காட்சி..

வண்ணங்களைத் தேடி அலையும்
வேட்டை எனவும்..
அசைவுகளின் பதிவுகளை சுரண்டிப் பார்க்கும்
ஆவல் எனவும்..
வழித் தவறுதலுக்குரிய
காரணங்களைப் பக்கவாட்டு மரங்களில்
கிறுக்கி வைக்கிறது..

தெளிவற்ற காட்சி என்னும் குற்றச்சாட்டோடு
புலம்ப நேரிடலாம்
படுக்கையிலிருந்து அலறியோ மருண்டோ
விழிக்கும் கணத்தில்..

இவைகளைத் திட்டமிட்டு
வாழ்வின் நொடிப்பொழுதுகளில் என்னிடம்
அனுப்பி வைக்கும் தருணங்களைக்
கைது செய்துவிடப் போவதாக

அனுமதி கேட்டு அரசாங்க வரிசைகளில்
நிற்பதற்கான தீர்மானத்தோடு..

கழிவறைக் கண்ணாடி முன் நின்றபடி..
பற்களை சோதித்து
பற்பசை பிதுக்கியபோது..

கால்களை மீடுக்கொள்வதற்கான
பிரயத்தனங்களோடு முனகத் தொடங்கும்
ஒரு காட்சி..
கண்ணாடியின் பாதரசக் குழம்பென
வழிந்து..உருகி..
சட்டென ஆவியாகி மறைந்தது..!

****

நன்றி : ' வார்ப்பு ' இணைய இதழ் - ( பிப்பிரவரி - 25 - 2010 )

http://www.vaarppu.com/view/2099/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக