ஞாயிறு, பிப்ரவரி 28, 2010

ஷாமியானாப் பந்தலுக்குக் கீழே..

*

மரணங்கள்
அழைப்பிதழ் கொடுப்பதில்லை

ஒரு அகால இரவிலோ
புலராத வைகறையிலோ
அவை ..
திடீரென வந்து சேர்கின்றன.

யாரும் அழைக்காமலே
வருவதும் போவதுமாக இருக்கிறார்கள்
எல்லாரும்.

மரணத்தின் தரிசனம்..
வீட்டு ஹாலில் கிடைக்கிறது பெரும்பாலும்..

பெருங்குரலெடுப்போ..
நேர நீட்சிக்கு பிறகு தொடரும் விசும்பலோ..
எதுவும் அசைப்பதில்லை..

நின்று நிதானமாக எரியும்
மரணத்தின் விளக்குச் சுடரை..

ரோஜா இதழ்களின் நறுமணக் கமழ்தலும்
கசியும் பத்தியின் வெண்புகைச் சுருளும்..
சூழலை அடர்த்தியாக்குகின்றன

தீர்க்கமான மௌனமொன்றை
முன்னிறுத்தும் பொருட்டு..

வாழ்தலின் தர்க்கங்கள்
தவிடு பொடியாகும்
சூட்சுமங்களை..
ஷாமியானாவின் பந்தலுக்குக் கீழே
பகிர்ந்து கொள்கிறார்கள்..

ஒவ்வொரு மரண நிகழ்தலின்
ஒருங்கிணைப்பில்..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக