ஞாயிறு, பிப்ரவரி 28, 2010

உன் வாசல் தொட்டுத் திரும்பும்..ஒரு பனிக்காற்று

*

எனது கவன ஈர்ப்பு விசையில்
சிக்கிக் கொள்ளாமல்
நழுவும் சாதுரியம்
கை வரப் பெற்றிருக்கிறாய்

நீண்டுயர்ந்த
மௌனத்தின் அடிவாரத்தில்
பொடி எழுத்தில்
புன்னகை எழுதுகிறாய்

உன்
இரவின் வாசலைத்
தொட்டுத் திரும்பும்
ஒரு பனிக்காற்றைப் போல

வெண்மைத் துகள்களாய்
உறைந்து உதிர்கிறேன்

உனது
வீட்டுக்கும் சாலைக்குமிடையிலான
சிறிய புல்வெளிப் பாதையில்..

மல்லிகைப் பந்தலில்
மலர்கள் கொய்யும் காலை வெய்யிலில்..
உணர்ந்து கொள்..

உன் உள்ளங்காலில்..
சில்லிட்டு கரையக்கூடும்
என் மனதென்று..!

****

1 கருத்து: