ஞாயிறு, பிப்ரவரி 28, 2010

நீ - நான் - மற்றும் அவள் சாயல்கள்..

*

ஓடி வந்து ஏறியதில்
வாங்கிய மூச்சில்..
அவள்
உன் சாயலை ஒத்திருந்தாள்

பேருந்தின்
உள் நெரிசலில்..
உருவாகும் காலைநேரக் கசகசப்பை
அவள் முகம்
அசூயைக் காட்டியதில்
அவள்
என் சாயலை ஒத்திருந்தாள்

சீரற்ற ஓட்டத்தின்
ஜன்னல் வழிக் காற்றை
கொஞ்சமாய் ஏந்தியபடி..
' உஸ்..உஸ்..' - என்று
அனுபவித்ததில்
அவள்
உன் சாயலை ஒத்திருக்கிறாள்

பயணச்சீட்டுக்கான
சில்லறைகளை
கைக்குள் பத்திரமாய்
பொத்தி வைத்திருந்த லாவகத்தில்
அவள்
என் சாயலை ஒத்திருக்கிறாள்

ஆசுவாசத்திற்கு பிறகு
தன் வலது காதோரம் ஒதுங்கும்
கற்றைக் குழல் நறுவிசில்
அவள்
அவளாகவே தோற்றமளிக்கிறாள்

தன் நிறுத்தத்தில் இறங்க முனைந்ததில்
குறுக்கே நின்ற மனிதனை..

' எருமை மாதிரி நிக்கறியே..
லேடீஸ் வர்றாங்கல்ல.. ஒத்து..! ' - என்றபோது

அவள் ஒத்திருக்கவில்லை..
உன் சாயலையோ
என் சாயலையோ..!

****

2 கருத்துகள்: