ஞாயிறு, பிப்ரவரி 28, 2010

பெரு மழைக்கு அல்ல..!

*

உள்ளங்கை பொதிக்குள்
பத்திரமாய் உறங்கும் குழந்தைகளின்
செவிகள் சேகரிக்கின்றன..

தூரத்து கரைகளில்
வெடித்து அடங்கும் குண்டுகளின்
சப்தங்களை..

உயிர்களை துளையிட்டு
புதையும் துப்பாக்கி ரவைகளை
பிடுங்கி எரியும் வல்லமை
இனி எந்த விரல்கள் பெறுமோ
அறியோம்..

நம்பிக்கையோடு தாங்கி சுமக்கிறோம்
பூமிக்கு வருகை தந்திருக்கும்
ஒவ்வொரு ராஜக்குமாரியையும்..
மௌனமாய் விழி உருட்டி
கருகிய மரங்களின் இலைகளை உள்வாங்கி
பதியும் ராஜக்குமாரன்களையும்..

வேலிகளுக்கு வெளியே
பூத்துவிடுதல் குறித்து..

ராணுவ பூட்சுகளின் கால்மிதி
சகதிகளுக்கு கீழே..
ஆழத்தில்..
புதையுண்டு கிடக்கின்றன விதைகள்..

அவற்றுக்கு உரமாய் ஆகிப் போயினர்
என் சகோதர சகோதரிகள்..

நாங்கள் காத்திருப்பது
பெரு மழைக்கு அல்ல..
சிறு தூறலுக்கு..!

****

நன்றி : ' வார்ப்பு ' இணைய இதழ் - ( பிப்பிரவரி - 25 - 2010 )

http://www.vaarppu.com/view/2099/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக