ஞாயிறு, பிப்ரவரி 28, 2010

குழிந்திருக்கும் கருந்துளையின் வெப்பம்..

*

ஒற்றை வீட்டின் நடைக் கதவு கடந்த
மஞ்சள் நிறப் பாதையில்
இரு மருங்கிலும்
தலையசைத்து சிவந்து சிரிக்கும் செம்பருத்திப் பூக்கள்..

வருடும் விரலிடுக்கில்
பிசுப்பிசுக்கின்றன
ரத்தத்தின் நிண ஈரம்..

சீமை ஓடு அடுக்கிய வீட்டின் கூரை மேல்
பெயர் தெரியா காட்டுக் கொடியொன்று படர்ந்து..
வீட்டை விட்டு விட மனமற்று
இறுக்கிப் பிடித்திருந்தது..

அதில் வாழ்ந்த மனிதர்களின்
ஓலங்களையும் சிரிப்பொலிகளையும்
முரண் எதிர் கோட்பாடுகளின்
சங்கமிப்பென..
சுவர்களில் துளைத்த புல்லட் குழிகளில்
உணவுகளைப் பதுக்குகின்றன
எறும்புக் கூட்டங்கள்..

மழைக்காலம்
பூக்கள் வளர்க்கின்றன
எறும்புகள் பிழைக்கின்றன.

மனிதர்கள்..
முட்கம்பிகளுக்கு அப்பால்..

ரத்தத்தின் நிண ஈரம்
பிசுப்பிசுக்க
விரலிடுக்கில் வாழ்வை நெருடியபடி..

துப்பாக்கிகளின் வாய்களில்
குழிந்திருக்கும்
கருந்துளையின் வெப்பம்..
உடலெங்கும் ஊற..
இரவைக் கடக்கும் மனதை..
மௌனமாய் வழியனுப்பி வைக்கின்றனர்
நம்பிக்கையற்ற காலணிகளை..
பிஞ்சுகளின் கால்களில் அவசரமாய்ப் பொருத்தி..!

****

நன்றி : ' உன்னதம் ' மாத இதழ் - ( பிப்பிரவரி 2010 )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக