திங்கள், மே 31, 2010

ஒரு மரணத்தின் மதியவேளை...

*
ஒரு மரணத்தின் மதியவேளை
மிகவும் வெப்பம் மிகுந்ததாக பாசாங்கு செய்கிறது

வீசும் சிறு குளிர் காற்றையும்
உஷ்ணப்படுத்தி ஏமாற்றுகிறது

உணவு செரிமானத்தை அனுமதிக்க மறுக்கிறது
உணவையே புறந்தள்ளுகிறது

எதிர் கொள்ளும் முகங்களில்
துயரத்தின் நிழலை வழிய விடுகிறது

ஒரு
மரணத்தின் மதியவேளை

தொலைதூரங்களுக்கு தகவலுனுப்ப
துயரத்தை சுலபமாக்குகிறது
தன் மரணச் செய்தியைத் தானே துரிதப்படுத்துகிறது

இளைப்பாறுதலை மறுதலிக்கிறது
நிழல் தராமல் ஒளிந்து கொள்கிறது

பலவகை மலர்களின் நறுமணங்களுக்காக
மௌனமாய்க் காத்திருக்கும் பொருட்டு

மரணத்தின் மதிய வேளை..

ஆழ்ந்த துயரம் கூர்ந்த
தனிமையை
எப்போதும் நாடுகிறது..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக