திங்கள், மே 31, 2010

பிரியத்தின் பாத நிழல்

*
பேச்சற்று வெளியேற நேர்ந்தது
இறுகிய உதடுகளின் இருண்மையை
தந்து நின்ற போது..

பசித்தலையும் சிந்தனைகளை அதட்டி
தாகம் தீர்க்க கொடுப்பதற்கு
கைவசம் வார்த்தைகள் இல்லை..

காரணங்களின் வேர்களைத் தேடுதல்
சாத்தியமற்ற நிழலின் ஆழம் போல
வெயில் வேறெங்கோ உயரத்தில் எரிகிறது..

தனிமை அறைக்கு திரும்புதல்
அர்த்தமிழந்த ஒளியை பொழியச் செய்கிறது
சிறுமையின் இருள் மூலைகளில்..

மென்மையாகத் தட்டப்படும் கதவுக்கு அப்பால்
ஒரு பிசாசையோ பூதத்தையோ
எதிர்பார்க்கிறது செவி..

மீண்டும் சில அவச் சொற்கள்
பூங்கொத்தாக நீட்டப்படலாம்
பரிசென வாங்கிக் கொள்ளும்படியான
உத்தரவாக..!

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( மே - 21 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=8829&Itemid=139

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக