புதன், மார்ச் 31, 2010

புன்னகைப்பதற்குரிய உத்தரவு..!

*

புன்னகைப்பதற்குரிய உத்தரவை
நீ இன்னும் வழங்கவில்லை..

கருகி வரும்
வானத்தின் அடர் நீளத்தில்..
மேகம் வழியே...
இன்றைய கடைசி சூரியன்
எழுதும் கவிதையொன்று..

பறந்து கடக்கும் கொக்கின் சிறகைத்
தொற்றிக் கொள்கிறது..

புன்னகைப்பதற்குரிய உத்தரவை
நீ இன்னும் வழங்கவில்லை..

மொட்டை மாடிக் கொடியெங்கும்..
படபடத்துக் கொண்டிருந்த
துணியத்தனையும்..
உன் புறங்கையில்..தஞ்சம்..

இன்னும் படபடத்தபடியிருக்கும்
என் இதயத்தின் சிறகை
நறுக்கி எறியும் கூர்மை - உன் பார்வையில்..

புன்னகைப்பதற்குரிய உத்தரவு..
உன்னிடம் இல்லை..
இப்போதும்...
எப்போதும்..
எப்பெப்போதும்..

மொட்டைமாடிக் கொடிக்கம்பில்..
ஒற்றை காகம் ஒன்றமர்ந்து..
விடாமல் கரைகிறது..
நமக்காக..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக