*
புத்தகங்கள் குவிந்திருக்கும்
அறையில்..
துயில் கொள்ள
இடம் கேட்டு..
வாசலில் நின்றது ஒரு கவிதை..
வார்த்தைகள் ஒதுக்கி..
வழியமைத்தேன்..
இரவு நெடுக..
குறட்டையொலி வழியத்
தூங்கியது..
விடிந்த பின்னும் எழாதோ..?
என்
தலையில் முளைக்கும்
மௌனங்களை
அள்ளி முடிய..
மறுக்கின்றன விரல்கள்..!
இருட்டோ..
ஒரு பந்தைப் போல
உருளுகிறது..
அங்குமிங்கும்..
அறைமுழுதும்..
ஓடிப்பிடித்து விளையாடும்
இருளையும்.. குறட்டையையும்..
கவிதையின்
கால்மாட்டில்
உட்கார்ந்து..
வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்..!
*******
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக