சனி, மார்ச் 28, 2009

மெல்லியக் காற்றின் நிழல்..!

*

சாம்பல் நிற நிழல் ஒன்று
படுக்கையறையில்..

ஆரஞ்சு குண்டு பல்புக்குக் கீழே
வட்டமாய் ஒரு அடர் நிழல்..

என்
மார்பு.. மீது..மல்லாந்திருக்கும்...
அவனின்..புறங்கை சுண்டுவிரலுக்கு அடியில்
ஒரு கரு நிழல்..

அசையும் ஜன்னல் திரைச் சீலையில்
நெடுங்குழலாய் ஒதுங்கும் ஒரு நிழல்..

தோட்டத்து
நெல்லி மரத்து இலை பரவும்
சுவர் நிழல்..

சுழலும் மின்விசிறி வேகத்தில்..
சிதறும் மெல்லிய காற்றின்
நிழல்..

முகத்தில் துளிர்த்திருந்த
முத்த ஈரம்..
காய்கிறது மெல்ல..
நிழலின் உத்தரவால்..

முகம் திருப்பிப் படுத்திருந்த
அவன் காது மடலில்..
நெளிந்து மடியும் நிழல்களில்..

பதுங்கிக் கிடக்கக்கூடும்...

முன்னிரவில்..
நாங்களிருவரும்..
சேர்ந்து வாசித்தக் கவிதை ஒன்று..!


******

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக