செவ்வாய், மார்ச் 03, 2009

மழையின் நர்த்தனம்


*
மௌனம் சுமந்து வருகிறது மழை..
மோதிய தருணத்தில்..
கூடிய வேகத்தில்
சிரித்து நெளிகிறது.

குடை விரித்து..நீர் தடுத்து..
பாதம் அளந்து..நடக்கும் சாலையில்..
சுவடு அழித்து..நகைக்கிறது.

தரையில் விழாத வண்ணம்..
'வானத்தை' மடியில் ஏந்தி..அழகு காட்டுகிறது.

டீ கடையில்..
விரல்கள் ஏந்திய
சிகரெட் நுனியில்..
நெருப்பின் இதயம் எரிய..

காற்றில் கலக்கும் புகையும்..
அடுப்பில் கொதிக்கும்..பாலின் தாளத்தில்..
வளைந்து..நெளிந்து..சிரிக்கிறது.

முச்சாலை வளைவில்..
நாயொன்று..
மழையின் தாளத்தோடு..காதுகள் துள்ள..
கவனக் குறைவாய்த் திரும்பியதில்..

வேகமாய்..விரைந்த..
காரொன்றில் மோதிச் சிதறி..
ரத்தமாய் பரவித் துடிக்க..

சற்றுத் தயங்கி..நின்ற கார்..
மீண்டும் விரைந்து..புள்ளியானது.

சாலையில்..
ரத்தம்..மழையோடு ஆடியது..
மழையின்..நர்த்தனம்..
இன்னும் வலுத்தது..!
**********

1 கருத்து:

  1. தொடக்கம் அழகு. முடிவு சோகம்..
    மழையின் நடனத்தை மொழியாக்கியதற்கு நன்றிகள் பல

    பதிலளிநீக்கு